Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: கொரோனாவைக் கட்டுப்படுத்த, மத்திய அரசோடு இணைந்து செயல்பட்டு வருகிறது, தமிழக அரசு. 1,000 ரூபாய் உட்பட பல இலவசங்களை, மக்களுக்கு முதல்வர், இ.பி.எஸ்., அள்ளி வழங்கி வருகிறார்; மருத்துவத் துறையினருக்கும், பல அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளார்.
எந்த ஒரு மாநில அரசும் செய்யாத பல விஷயங்களை, தமிழக அரசு செய்து வருகிறது.இது தொடர்பாக, டில்லி அரசியல் வட்டாரங்களில் ஒரு செய்தி அடிபடுகிறது. தமிழக சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு, ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டும். 'கொரோனா விவகாரத்தில் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது' என, அ.தி.மு.க., கருதுகிறதாம். 'இதை சாதகமாக பயன்படுத்தி, தேர்தலை முன்கூட்டியே நடத்தினால், மீண்டும் ஆட்சியில் அமரலாம்' என்பது, அவர்கள் கருத்தாம்.
இதனால் தான், அ.தி.மு.க., அரசின் செயல்பாடுகளை கடுமையாக ஸ்டாலின் விமர்சித்து வருகிறார் எனவும் சொல்லப்படுகிறது.இந்த ஆண்டு இறுதியில், நவம்பர் மாதம், பீஹாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதே நேரத்தில், தமிழகத்திலும் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என்பது, அ.தி.மு.க., விருப்பம் என, டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'இப்படி முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டுமானால், ஜூலை அல்லது ஆகஸ்டில், சட்டசபையைக் கலைக்க, தமிழக அரசு சிபாரிசு செய்ய வேண்டும். இதெல்லாம் நடக்கிற விஷயமா... வெறும் வதந்தி' என, அ.தி.மு.க.,வினர் சிலர் சொல்கின்றனர். அரசியலில் எதுவும் நடக்கலாம்!